Thursday, April 9, 2020

வைரஸ் அறிவோம் கொரோனாவை வெல்வோம்

கொரோனா வைரஸ் பற்றி பல வதந்திகளும் போலி அறிவியல் செய்திகளும் உலவுகின்றன. அதற்கு காரணம் நம் மக்களிடையே வைரஸ்கள் பற்றிய புரிதல் இல்லாமையே.ஆகவே வைரஸ்கள் பற்றிய சில செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.மிக சுருக்கமாக பார்ப்போம்.

முதலில் வைரஸ்கள் என்பவை முழு உயிர் கொண்டவை அல்ல.அவை அரை உயிரிகள்தான்.
உயிரினங்களின் மிக சிறு பாகமான "செல்"களை விட மிக சிறியவை.நம் எல்லோருக்கும் தெரியும்.
உயிரினங்கள் செல்களால் கட்டப்பட்டுள்ளன.வைரஸ்கள் அப்படி செல் அமைப்பை கொண்டவை அல்ல.செல்களின் ஒரு பகுதியான DNA அல்லது  RNA அதை சுற்றி ஒரு புரத உறை அவ்வளவுதான் வைரஸ்

இப்போது நாம் சந்திக்கும்  பேரபாயமான கொரோனா வைரஸ் (novel covid 19 ) வெறும் RNA மட்டுமே கொண்டது.அதை சுற்றி புரதத்தினால் ஆன ஒரு உறை  அந்த உறையின் மீது சிறு சிறு முட்கள் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் புரதம். அவ்வளவுதான் அந்த வைரஸ்.

எந்த வைரசாக இருந்தாலும் அவை வெட்ட வெளியில் வாழ முடியாது.அவை வாழ வேண்டுமானால் ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே புகுந்து அதன் செல்களை துளைத்துக்கொண்டு உள்ளே சென்று அங்குதான் வாழ முடியும்.உயிரினங்களுக்கு வெளியே அவை குறிப்பிட்ட ஒரு கால அளவுக்குத்தான் உயிரோடு இருக்கும்.இந்த கால அளவு ஒவ்வொரு வகை வைரசுக்கும் வேறுபடும். அந்த கால அளவுக்குள் அது உட்புக உயிரினம் கிடைக்கவில்லை என்றால் அவை இறந்துவிடும்.

சரி மனித உடலில் உள்ளே புகும் வைரஸ் என்ன செய்யும் என்று பார்ப்போம்.உணவு ,நீர், காற்று, கொசுக்கடி இப்படி ஏதேனும் ஒரு வழியில் உட்புகும் வைரஸ் அதற்கு வசதியான அதன் தாக்குதலுக்கு ஏதுவான ஒரு செல்லை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விடும்  நுழைந்த வைரஸ் அந்த செல்லின் உள்ளே ஒட்டிக்கொண்டு தன்னை தானே பிரதி எடுக்கும்.அதுதான் அதன் இனப்பெருக்கம்  இதன் மூலம் ஒரு செல்லுக்குள்ளேயே லட்சக்கணக்கான வைரஸ்கள் உற்பத்தி ஆகி விடும்.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனப்பெருக்கம் செய்ய இடமில்லாத நிலையை அடையும்போது அந்த செல் வெடித்து சிதறி விடும்.அதிலிருந்து வெளிப்படும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களில் குடியேறி இதே வேலையை செய்யும்.

இப்படியாக வைரஸ் தாக்குதலில் உடல் செல்கள் இறந்து போவது உடல் உறுப்புகள் செயல்படுவதையே பாதிக்கும்.இதுதான் நோய்.இதனை துவக்கத்தில் மூளை உணர்வதில்லை.செல்களின் இழப்பு அதிகரிக்கும்போதுதான் மூளைக்கு செய்தி எட்டி விழித்துக்கொள்கிறது.வைரஸ் தாக்குதலை நிறுத்தாவிட்டால் செல்கள் தொடர்ந்து அழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதால் நோய்  எதிர்ப்பு ஆற்றலை செயலில் இறங்குமாறு மூளை உத்தரவிடும். அது உடனே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும்.அதுதான் காய்ச்சல் உடலின் வெப்பநிலை உயரும்போது வைரஸ்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.வைரஸ்களின் எண்ணிக்கை உயராமல் ஒரு நிலையில் இருக்கும். அப்போது நோய் எதிர்ப்பு முறை குருதியில் உள்ள வெள்ளை அணுக்களை வைரஸ்களை தாக்கி அழிக்க அனுப்பி வைக்கும். கிட்டத்தட்ட அது ஒரு போர்தான்.இந்த போரில் நோய் எதிர்ப்பு முறைக்கு வலுவூட்டத்தான் மருந்து கொடுக்கிறார்கள் மருத்துவர்கள்  இஃதன்னியில் வைரஸ்கள் ஊடுருவி இருக்க கூடிய நோயுற்ற செல்களையயும் நோய் எதிர்ப்பு முறை தாக்கி அழித்து விடும். இப்படியாக அந்த வைரஸ்களை கொன்று உடலிலிருந்து வெளியேற்றிய அனுபவம் குருதியில் நினைவாக நிலை பெற்றுவிடும். அதன்பின் அந்த வைரஸ் எப்போது உடலில் நுழைந்தாலும் குருதி அதனை அடையாளம் கண்டு கொண்டு உடனே அதனை தாக்கி அழித்துவிடும்.இதுதான் தடுப்பூசிக்கான அடிப்படை.

இப்போது கொரோனா வைரசுக்கு வருவோம். கொரோனா வைரஸ் மூக்கு வாய் கண்  வழியாக மனித உடலில் புகுந்து முதலில் தொண்டை செல்களை தனது கூரப்பான புரத முட்களால் பற்றிக்கொள்கிறது.அப்படியே அந்த செல்லுக்குள் நுழைந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கிறது   அதிலிருந்து படிப்படியாக பெருகி நுரையீரல் செல்களை தாக்கி அழிக்கிறது.தொண்டையை தாக்கி பெருகி வரும்போதுதான் வறட்டு இருமலும் தொண்டை வலியும் காய்ச்சலும் ஏற்படுகிறது அதுவே கட்டுப்படுத்தப்படாமல் போகும்போது நுரையீரலையும் சுவாச மண்டலத்தையும் தாக்கி நிமோனியா காய்ச்சலாக உயிருக்கு உலை வைக்கிறது. இந்த வைரஸை கொல்வதற்கு நோய் எதிர்ப்பு முறைக்கு துணை நிற்கும் மருந்தைத்தான் இப்போது உலகம் தேடிக்கொண்டிருக்கிறது இப்போதைக்கு காய்ச்சலுக்கான பொதுவான மருந்துகள், நோய் எதிர்ப்புக்கான மருந்துகள்,ஆதரவு கருவிகள் இவற்றை கொண்டுதான் மருத்துவ உலகம் கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறந்தவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை இங்கு நினைவில் கொள்க

இப்படியாக மனித உடலின் செல்லுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு இனப்பெருக்கம் செய்யும் வைரஸை சுடுதண்ணி குடுச்சு கொன்னுடலாம் , நீராவி புடிச்சு கொன்னுடலாம், கல் உப்பை கரைத்து குடித்தால் கொன்று விடலாம் ,மாட்டு மூத்திரம் குடுச்சு கொன்னுடலாம் ,இஞ்சி சாறு , மிளகு ரசம் , குடுச்சா கொரோனா வைரஸ் செத்து போயிடும் என்றெல்லாம் வாட்சாப் விஞ்ஞானிகள் கிளப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவ அறிவியலையே நம்புவோம். அறிவால் வெல்வோம்.


No comments:

Post a Comment